சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
Selected thirumurai | thirumurai Thalangal | All thirumurai Songs |
Thirumurai |
3.079
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
என்றும் அரியான், அயலவர்க்கு; இயல் பண் - சாதாரி (திருகோகர்ணம் (கோகர்ணா) மாபலநாதர் கோகரணநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=A_SShuNsLwI |
6.049
திருநாவுக்கரசர்
தேவாரம்
சந்திரனும் தண்புனலும் சந்தித்தான் காண்; பண் - திருத்தாண்டகம் (திருகோகர்ணம் (கோகர்ணா) மாபலநாதர் கோகரணநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=n_PbUkZ-gEA |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3.079  
என்றும் அரியான், அயலவர்க்கு; இயல்
பண் - சாதாரி (திருத்தலம் திருகோகர்ணம் (கோகர்ணா) ; (திருத்தலம் அருள்தரு கோகரணநாயகியம்மை உடனுறை அருள்மிகு மாபலநாதர் திருவடிகள் போற்றி )
என்றும் அரியான், அயலவர்க்கு; இயல் இசைப்பொருள்கள் ஆகி எனது உள் நன்றும் ஒளியான்; ஒளி சிறந்த பொன் முடிக் கடவுள்; நண்ணும் இடம் ஆம் ஒன்றிய மனத்து அடியர் கூடி, இமையோர் பரவும் நீடு அரவம் ஆர் குன்றுகள் நெருங்கி, விரி தண்டலை மிடைந்து, வளர் கோகரணமே. | [1] |
பேதை மட மங்கை ஒரு பங்கு இடம் மிகுத்து, இடபம் ஏறி, அமரர் வாதைபட வண்கடல் எழுந்த விடம் உண்ட சிவன் வாழும் இடம் ஆம் மாதரொடும் ஆடவர்கள் வந்து அடி இறைஞ்சி, நிறை மா மலர்கள் தூய், கோதை வரிவண்டு இசை கொள் கீதம் முரல்கின்ற வளர் கோகரணமே. | [2] |
முறைத் திறம் உறப் பொருள் தெரிந்து முனிவர்க்கு அருளி, ஆல நிழல்வாய், மறைத் திறம் அறத்தொகுதி கண்டு, சமயங்களை வகுத்தவன் இடம் துறைத்துறை மிகுத்து அருவி தூ மலர் சுமந்து, வரை உந்தி, மதகைக் குறைத்து, அறையிடக் கரி புரிந்து, இடறு சாரல் மலி கோகரணமே. | [3] |
இலைத் தலை மிகுத்த படை எண்கரம் விளங்க, எரி வீசி, முடிமேல் அலைத் தலை தொகுத்த புனல் செஞ்சடையில் வைத்த அழகன் தன் இடம் ஆம் மலைத்தலை வகுத்த முழைதோறும், உழை, வாள் அரிகள், கேழல், களிறு, கொலைத்தலை மடப்பிடிகள், கூடி விளையாடி நிகழ் கோகரணமே. | [4] |
தொடைத்தலை மலைத்து, இதழி, துன்னிய எருக்கு, அலரி, வன்னி, முடியின் சடைத்தலை மிலைச்சிய தபோதனன்; எம் ஆதி; பயில்கின்ற பதி ஆம் படைத் தலை பிடித்து மறவாளரொடு வேடர்கள் பயின்று குழுமி, குடைத்து அலை நதிப் படிய நின்று, பழி தீர நல்கு கோகரணமே. | [5] |
நீறு திரு மேனி மிசை ஆடி, நிறை வார் கழல் சிலம்பு ஒலிசெய, ஏறு விளையாட விசைகொண்டு இடு பலிக்கு வரும் ஈசன் இடம் ஆம் ஆறு சமயங்களும் விரும்பி அடி பேணி அரன் ஆகமம் மிகக் கூறு, வனம் ஏறு இரதி வந்து, அடியர், கம்பம் வரு, கோகரணமே. | [6] |
கல்லவடம், மொந்தை, குழல், தாளம், மலி கொக்கரையர்; அக்கு அரைமிசை பல்ல பட நாகம் விரி கோவணவர்; ஆளும் நகர் என்பர் அயலே நல்ல மட மாதர் அரன் நாமமும் நவிற்றிய திருத்தம் முழுக, கொல்ல விட நோய் அகல்தர, புகல் கொடுத்து அருளு கோகரணமே. | [7] |
வரைத்தலம் நெருக்கிய முருட்டு இருள் நிறத்தவன வாய்கள் அலற, விரல்-தலை உகிர்ச் சிறிது வைத்த பெருமான் இனிது மேவும் இடம் ஆம் புரைத் தலை கெடுத்த முனிவாணர் பொலிவு ஆகி, வினை தீர, அதன்மேல் குரைத்து அலை கழல் பணிய, ஓமம் விலகும் புகை செய் கோகரணமே. | [8] |
வில்லிமையினால் விறல் அரக்கன் உயிர் செற்றவனும், வேதமுதலோன், இல்லை உளது என்று இகலி நேட, எரி ஆகி, உயர்கின்ற பரன் ஊர் எல்லை இல் வரைத்த கடல்வட்டமும் இறைஞ்சி நிறை, வாசம் உருவக் கொல்லையில் இருங் குறவர் தம் மயிர் புலர்த்தி வளர், கோகரணமே. | [9] |
நேசம் இல் மனச் சமணர், தேரர்கள், நிரந்த மொழி பொய்கள் அகல்வித்து ஆசை கொள் மனத்தை அடியார் அவர் தமக்கு அருளும் அங்கணன் இடம் பாசம் அது அறுத்து, அவனியில் பெயர்கள் பத்து உடைய மன்னன் அவனை, கூச வகை கண்டு, பின் அவற்கு அருள்கள் நல்க வல கோகரணமே. | [10] |
கோடல் அரவு ஈனும் விரி சாரல் முன் நெருங்கி வளர் கோகரணமே ஈடம் இனிது ஆக உறைவான் அடிகள் பேணி, அணி காழி நகரான்- நாடிய தமிழ்க்கிளவி இன் இசை செய் ஞானசம்பந்தன்-மொழிகள் பாட வல பத்தர் அவர் எத்திசையும் ஆள்வர்; பரலோகம் எளிதே. | [11] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
6.049  
சந்திரனும் தண்புனலும் சந்தித்தான் காண்;
பண் - திருத்தாண்டகம் (திருத்தலம் திருகோகர்ணம் (கோகர்ணா) ; (திருத்தலம் அருள்தரு கோகரணநாயகியம்மை உடனுறை அருள்மிகு மாபலநாதர் திருவடிகள் போற்றி )
சந்திரனும் தண்புனலும் சந்தித்தான் காண்; தாழ் சடையான் காண்; சார்ந்தார்க்கு அமுது ஆனான் காண்; அந்தரத்தில் அசுரர் புரம் மூன்று அட்டான் காண்; அவ் உருவில் அவ் உருவம் ஆயினான் காண்; பந்தரத்து நால் மறைகள் பாடினான் காண்; பலபலவும் பாணி பயில்கின்றான் காண்; மந்திரத்து மறை பொருளும் ஆயினான் காண் மா கடல் சூழ் கோகரணம் மன்னினானே. | [1] |
தந்த வ(அ)த்தன் தன் தலையைத் தாங்கினான் காண்; சாரணன் காண்; சார்ந்தார்க்கு இன் அமுது ஆனான் காண்; கெந்தத்தன் காண்; கெடில வீரட்டன் காண்; கேடு இலி காண்; கெடுப்பார் மற்று இல்லாதான் காண்; வெந்து ஒத்த நீறு மெய் பூசினான் காண்; வீரன் காண்; வியன் கயிலை மேவினான் காண்; வந்து ஒத்த நெடுமாற்கும் அறிவு ஒணான் காண் மா கடல் சூழ் கோகரணம் மன்னினானே. | [2] |
தன் உருவம் யாவர்க்கும் தாக்காதான் காண்; தாழ் சடை எம்பெருமான் காண்; தக்கார்க்கு உள்ள பொன் உருவச் சோதி; புனல் ஆடினான் காண்; புராணன் காண்; பூதங்கள் ஆயினான் காண்; மின் உருவ நுண் இடையாள் பாகத்தான் காண்; வேழத்தின் உரி வெருவப் போர்த்தான் தான் காண்; மன் உரு ஆய் மாமறைகள் ஓதினான் காண் மா கடல் சூழ் கோகரணம் மன்னினானே. | [3] |
ஆறு ஏறு செஞ்சடை எம் ஆரூரன் காண்; அன்பன் காண்; அணி பழனம் மேயான் தான் காண்; நீறு ஏறி நிழல் திகழும் மேனியான் காண்; நிருபன் காண்; நிகர் ஒன்றும் இல்லாதான் காண்; கூறு ஏறு கொடு மழுவாள் படையினான் காண்; கொக்கரையான் காண்; குழு நல் பூதத்தான் காண்; மாறு ஆய மதில்மூன்றும் மாய்வித்தான் காண் மா கடல் சூழ் கோகரணம் மன்னினானே. | [4] |
சென்று அச் சிலை வாங்கிச் சேர்வித்தான் காண்; தியம்பகன் காண்; திரி புரங்கள் மூன்றும் பொன்றப் பொடி ஆக நோக்கினான் காண்; பூதன் காண்; பூதப்படையாளீ காண்; அன்று அப் பொழுதே அருள் செய்தான் காண்; அனல் ஆடி காண்; அடியார்க்கு அமுது ஆனான் காண்; மன்றல்-மணம் கமழும் வார்சடையான் காண் மா கடல் சூழ் கோகரணம் மன்னினானே. | [5] |
பிறையோடு பெண் ஒருபால் வைத்தான் தான் காண்; பேரவன் காண்; பிறப்பு ஒன்றும் இல்லாதான் காண்; கறை ஓடு மணிமிடற்றுக் காபாலீ காண்; கட்டங்கன் காண், கையில் கபாலம் ஏந்திப் பறையோடு பல்கீதம் பாடினான் காண்; ஆடினான் காண், பாணி ஆக நின்று; மறையோடு மா கீதம் கேட்டான் தான் காண் மா கடல் சூழ் கோகரணம் மன்னினானே. | [6] |
மின் அளந்த மேல்முகட்டின் மேல் உற்றான் காண்; விண்ணவர் தம் பெருமான் காண்; மேவில் எங்கும் முன் அளந்த மூவர்க்கும் முதல் ஆனான் காண்; மூ இலை வேல் சூலத்து எம் கோலத்தான் காண்; எண் அளந்து என் சிந்தையே மேவினான் காண்; ஏ வலன் காண்; இமையோர்கள் ஏத்த நின்று, மண் அளந்த மால் அறியா மாயத்தான் காண் மா கடல் சூழ் கோகரணம் மன்னினானே. | [7] |
பின்னுசடை மேல் பிறை சூடினான் காண்; பேர் அருளன் காண்; பிறப்பு ஒன்று இல்லாதான் காண்; முன்னி உலகுக்கு முன் ஆனான் காண்; மூ எயிலும் செற்று உகந்த முதல்வன் தான் காண்; இன்ன உரு என்று அறிவு ஒணாதான் தான் காண்; ஏழ் கடலும் ஏழ் உலகும் ஆயினான் காண்; மன்னும் மடந்தை ஓர் பாகத்தான் காண் மா கடல் சூழ் கோகரணம் மன்னினானே. | [8] |
வெட்ட வெடித்தார்க்கு ஓர் வெவ் அழலன் காண்; வீரன் காண்; வீரட்டம் மேவினான் காண்; பொட்ட அநங்கனையும் நோக்கினான் காண்; பூதன் காண்; பூதப் படையினான் காண்; கட்டக் கடுவினைகள் காத்து ஆள்வான் காண்; கண்டன் காண்; வண்டு உண்ட கொன்றையான் காண்; வட்ட மதிப்பாகம் சூடினான் காண் மா கடல் சூழ் கோகரணம் மன்னினானே. | [9] |
கையால் கயிலை எடுத்தான் தன்னைக் கால் விரலால்-தோள் நெரிய ஊன்றினான் காண்; மெய்யின் நரம்பு இசையால் கேட்பித்தாற்கு மீண்டே அவற்கு அருள்கள் நல்கினான் காண்; பொய்யர் மனத்துப் புறம்பு ஆவான் காண்; போர்ப் படையான் காண்; பொருவார் இல்லாதான் காண்; மை கொள் மணிமிடற்று வார் சடையான் காண் மா கடல் சூழ் கோகரணம் மன்னினானே. | [10] |